Kural 1106

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

uRudhoaRu uyirdhaLirppath theeNdalaal paedhaikku
amizhdhin iyandrana thoaL.

🌐 English Translation

English Couplet

Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again!.

Explanation

The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2 மணக்குடவர்

சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும். சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன. (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் - நான் இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுதலால்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இவ்விளம் பெண்ணிற்குத் தோள்கள் அமிழ்தினால் அமைக்கப் பெற்றனவாயிருக்கின்றன. மென்மையுந் தண்மையும் இன்பமும் பற்றி 'அமிழ்தி னியன்றன' என்றான். பேதை என்னுஞ் சொல் பருவங் குறியாது இளமை குறித்து நின்றது. 'தோள்' பால்பகாவஃறிணைப் பெயர். தழைத்தல் கிளர்ச்சியும் உரமும் பெறுதல்.

5 சாலமன் பாப்பையா

இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

6 கலைஞர் மு.கருணாநிதி

இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.

7 சிவயோகி சிவக்குமார்

ஒவ்வொரு பொழுதும் உயிர் வளர்க்கத் தீண்டுவதால் பேதைக்கு அமிழ்தைப் போன்ற இயல்புடைய தோள்.

8 புலியூர்க் கேசிகன்

அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்!

More Kurals from புணர்ச்சிமகிழ்தல்

அதிகாரம் 111: Kurals 1101 - 1110

Related Topics

Because you're reading about Joy of Union

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature