உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.
Transliteration
uruvukaNdu eLLaamai vaeNdum uruLperundhaerkku
achchaani annaar udaiththu.
🌐 English Translation
English Couplet
Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!.
Explanation
Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
7 scholars' interpretations
1 மு.வரதராசனார்
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
2 மணக்குடவர்
யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.
3 பரிமேலழகர்
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக. (சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர், அவரை அத்திட்பம் நோக்கி அறிந்துகொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து-உருண்டோடுகின்ற பெரிய தேர்க்கு இன்றியமையாத சிறிய அச்சாணிபோல, வினைத்திறம் மிக்க சிற்றுடம்பினரை இவ்வுலகம் கொண்டுள்ளது; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - ஆதலால், அத்தகையோரை வடிவின் சிறுமை நோக்கித் தாழ்வாக எண்ண வேண்டா. உருவின் சிறுமை எள்ளாமை வேண்டும் என்பதனாலும் உவமத்தாலும் பெறப்பட்டது. உருளுதல் தேர்ச்சக்கரத்தின் தொழில். சினைவினை முதல்வினையாக நின்றது. பெருந்தேர் ஏழுதட்டுக்களைக் கொண்ட முழுத்தேர். அச்சு - சக்கரங் கோத்த குறுக்கு உத்தரம். அச்சாணி - சக்கரங் கழலாதவாறு அச்சின் கடைசியிற் செருகும் ஆணி. அதனாற் கடையாணி யெனவும்படும். அச்சாணி சிறிதாயிருந்தும் பெரிய கோயில் தேரையும் தாங்குவதும் அதன் இயக்கத்திற்கு இன்றியமையாததுமான சிறப்புடையது. "அச்சாணியில்லாததேர் முச்சாணும் ஓடாது." பெருந்தே ரோட்டத்திற்கு இன்றியமையாத சிறிய அச்சாணிபோல், பெருநாட் டாட்சிக்கும் இன்றியமையாத சிற்றுருவப் பேராற்ற லமைச்சர் உளர். அவரை வடிவு பற்றி இகழாது, அவர் மதிநுட்பமும் வினைத்திட்பமும் நோக்கி ஆட்சித் துணையாக அரசன் அமர்த்திக் கொள்க என்பதாம்.
5 சாலமன் பாப்பையா
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
6 கலைஞர் மு.கருணாநிதி
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
7 சிவயோகி சிவக்குமார்
உருவம் பார்த்து ஏளனமாக எண்ணக்கூடாது. உருளும் பெரிய தேருக்கு அச்சாணி போல் அவர்கள் இருக்கக் கூடும்.
More Kurals from வினைத்திட்பம்
அதிகாரம் 67: Kurals 661 - 670