உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.
Transliteration
utampaatu ilaadhavar vaazhkkai kutangaruL
paampoatu utanuRainh thatru.
🌐 English Translation
English Couplet
Domestic life with those who don't agree,
Is dwelling in a shed with snake for company.
Explanation
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
2 மணக்குடவர்
மனத்தினால் பொருத்த மில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும். இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அதுபோல உட்பகைவர் இடம் வந்தால் கொல்லுவரென்றது.
3 பரிமேலழகர்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும். (குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம், ஆகவே, அவ்வுவமையால் அவன் உயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். (இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப்பொருத்த மில்லாதவரோடு கூடி வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்போடு உடன் உறைந்த அற்று- ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு கூடிவதிந்தாற்போலும். இடச்சிறுமையாலும் உடனுறைவாலும் பாம்பாற் கொல்லப்படுதல் போல், உட்பகையால் அழிவுறுதல் திண்ணமாதலால் அதனொடு கூடி வாழற்க என்பதாம்.உடம்பாடின்மை யென்பது இங்கு அன்பின்மையோடு பகைவர்க்குக் காட்டிக் கொடுத்தலையுந் தழுவிய தென்பது ,அதிகாரத்தாற் கொள்ளப்படும், "குடங்க மென்னும் வடசொற் றிரிந்து நின்றது," என்றார் பரிமேலழகர்.அது தென்சொல்லே யென்பதைப் பின்னிணைப்பிற் காண்க.
5 சாலமன் பாப்பையா
மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.
7 சிவயோகி சிவக்குமார்
முழு சம்மதம் இல்லாதவர் வாழ்க்கை இருண்ட குகைக்குள் கொடிய பாம்புடன் இருப்பதைப் போன்றது.
8 புலியூர்க் கேசிகன்
மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும்.
More Kurals from உட்பகை
அதிகாரம் 89: Kurals 881 - 890
Related Topics
Because you're reading about Internal Enemies