வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
Transliteration
VaaNikam seyvaarkku vaaNikam paeNip
piRavum thamapoal seyin.
🌐 English Translation
English Couplet
As thriving trader is the trader known,
Who guards another's interests as his own.
Explanation
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
9 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
2 மணக்குடவர்
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் - இலாபம்.
3 பரிமேலழகர்
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
பிறவும் தம்போல் பேணிச் செயின்-பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்-வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம். "கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும்" (பட்டினப். 205-211) வாணிகம் கொள்வினையையும் விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும், பொய்க்குங் கொள்ளைக்கும் இடந்தராமையாலும், மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதுங்கேடுமில்லா நல்வாணிகமாம்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
பிறர் பொருளையும், தம்முடைய பொருளைக் காப்பது போலக் காத்து வாணிபம் செய்தால், அதுவே வாணிபம் செய்பவர்களுக்கு நல்ல வாணிபம் ஆகும்.
6 சாலமன் பாப்பையா
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
7 கலைஞர் மு.கருணாநிதி
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.
8 சிவயோகி சிவக்குமார்
வியாபாரம் செய்பவருக்கு (வாங்குபவர்களுக்கு)வியாபாரம் செய்து(விற்று) பிற யாவற்றையும் தமக்கு உண்டானதை போல் செய்ய வேண்டும்.
9 புலியூர்க் கேசிகன்
பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்.
More Kurals from நடுவு நிலைமை
அதிகாரம் 12: Kurals 111 - 120
Related Topics
Because you're reading about Justice & Fairness