Kural 542

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vaanoakki vaazhum ulakellaam mannavan
koalnhoakki vaazhunG kuti.

🌐 English Translation

English Couplet

All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to king that ruleth all.

Explanation

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

2 மணக்குடவர்

உலகத்தாரெல்லாம் மழையை நோக்கி யின்புறாநிற்பர்; அதுபோலக் குடிகளும் அரசனது செங்கோன்மையை நோக்கியின்புறாநிற்பர்.

3 பரிமேலழகர்

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் . நோக்கி வாழ்தல் இன்றியமையாததாகக் கொண்டு வாழ்தல் . வானால் நீரும் உணவும் கிடைப்பது போல் , செங்கோலால் உயிர்ப் பாதுகாப்பும் , பொருட்காப்பும் கிட்டுவதால் , வான்போன்றே செங்கோலும் மக்கள் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததென்பதும் , செங்கோலின்றி வானிருந்தும் பயனில்லை யென்பதும் , பெறப்படும் . உலகு , கோல் என்பன ஆகுபெயர்கள் . கோலென்றது செங்கோலை. 'குடி' தொகுதிப்பெயர் . வானின் தண்பு உயிர்கட்கு இன்பஞ் செய்வது போல் கோனின் அன்பும் குடிகட்கு இன்பந்தருவதாம். "நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால் , யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே".(126) என்னும் புறப்பாட்டு இங்குக் கவனிக்கத் தக்கது .

5 திருக்குறளார் வீ. முனிசாமி

உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழும். குடிமக்கள் அரசனுடைய செங்கோலினை நோக்கி வாழ்வார்கள்.

6 சாலமன் பாப்பையா

உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

7 கலைஞர் மு.கருணாநிதி

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

8 சிவயோகி சிவக்குமார்

வானத்தை எதிர்பார்த்தே உலகம் வாழும் அதுபோலவே ஆட்சியாளரின் ஆணையை எதிர்பார்த்தே குடிமக்கள் வாழ்வும் இருக்கும்.

More Kurals from செங்கோன்மை

அதிகாரம் 55: Kurals 541 - 550

Related Topics

Because you're reading about Just Rule

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature