Kural 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vaeNtaRka vendritinum soodhinai vendradhooum
thooNtiRpon meenvizhungi atru.

🌐 English Translation

English Couplet

Seek not the gamester's play; though you should win,
Your gain is as the baited hook the fish takes in.

Explanation

Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

2 மணக்குடவர்

வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும். இது பின் கேடுபயக்குமென்றது.

3 பரிமேலழகர்

வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும். (வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான்வெல்லுந் திறமையும் வாய்ப்பும் உடையனாயினும் சூதாட்டை விரும்பற்க ; வென்றதூஉம் தூண்டில்பொன் மீன்விழுங்கிய அற்று-வென்று பொருள் பெற்றதும் இரையால் மறைக்கப்பட்ட தூண்டில் முள்ளை இரையென்று கருதி மீன் விழுங்கினாற் போன்றதே. வெல்லுதல் உறுதியன்மையின் 'வென்றிடினும்' என்றும், தீயவழியிற் பொருள் வருதலான் 'வேண்டற்க' என்றும், கூறினார். தொடக்கத்தில் வென்ற பொருள் சூதாட்டை விட்டு ஒருபோதும் நீங்காதவாறு பிணிக்கும் பொறியென்பதும், அதனாற் பின்பு பொருளெல்லாம் இழந்து உயிரும் துறக்க நேருமென்பதும், உவமையாற் பெறப்படும். சூதாட்டின் தன்மையுள்ள சீட்டாட்டும் சூதாட்டே. சூதாட்டின் தன்மைகள்; வெற்றி உறுதியின்றிக்குருட்டு வாய்ப்பாயிருத்தல், சில வலக்காரங்கள் கையாளப் பெறுதல், தோற்றார் வைத்த பணந்திரும்பாமை,ஒருவன் உழைப்பின்றி விரைந்து பிறர் பணத்தாற் செல்வனாதல், இழக்குந்தொறும் ஆசையுண்டாகி மேன்மேலும் வறுமை மிகுதல், வென்றார் மீது பொறாமையுண்டாதற் கிடமாதல், உழைப்பில் விருப்பஞ் செல்லாமை என்பனவாம். சீட்டின் விலை மிகக்குறைந்தும் பரிசுத் தொகை மிகவுயர்ந்தும் பரிசுகள் மிகப்பல்கியும் இருப்பது, தூண்டில் முள்ளை மறைக்கும் இரைபோற் கவர்ச்சிக்குரியதாம். செல்வரது பொருளாலன்றி வறியவரது பொருளால் ஒருவன் செல்வனாதல், திருவள்ளுவர் அறநெறிக்கும் பொருள்நூற் கொள்கைக்கும் முற்றும்மாறாம். 'வென்றதூஉம்' இன்னிசை யளபெடை. 'பொன், ஆகு பெயர். இங்குப் பொன்னென்றது கரும்பொன்னாகிய இரும்பை.

5 சாலமன் பாப்பையா

வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

6 கலைஞர் மு.கருணாநிதி

வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.

7 சிவயோகி சிவக்குமார்

விரும்பாதே வெற்றி பெற்றாலும் சூதினை வெற்றிதான் பொன் தூண்டிலின் முள்ளை விழுங்கிய மீன் போல் சிக்கச் செய்யும்.

8 புலியூர்க் கேசிகன்

தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம்.

More Kurals from சூது

அதிகாரம் 94: Kurals 931 - 940

Related Topics

Because you're reading about Gambling

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2026 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature