வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.
Transliteration
varaivilaa maaNizhaiyaar men-dhoaL puraiyilaap
pooriyarkaL aazhum aLaru.
🌐 English Translation
English Couplet
The wanton's tender arm, with gleaming jewels decked,
Is hell, where sink degraded souls of men abject.
Explanation
The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
2 மணக்குடவர்
முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.
3 பரிமேலழகர்
வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது, விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம். (உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
வரைவு இலா மாண் இழையார் மெல்தோள்- உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் வேறுபாடு பற்றி ஒருவரையும் விலக்காது பொருள் கொடுத்தார் யாவரையுந் தழுவும் விலைமகளிரின் மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு-அக்குற்றத்தை யறியும் உயர்வில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகாம். 'மாணிழையார்' சிறந்த அணிகல மணிந்த பெண்டிர்.இதனால் ஒப்பனையும் 'மென்றோள்' என்பதனால் உருவ அழகும் அறியப்படும். "புரையுயர் வாகும்" (தொல்.785), அளறு போல் துன்பந் தருவதை 'அளறு' என்றும் , விலைமகளிரொடு கூடின கீழ்மக்கள் அவரை ஒருகாலும் விடார் என்பது தோன்ற 'ஆழும்' என்றும், கூறினர்.
5 சாலமன் பாப்பையா
வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.
6 கலைஞர் மு.கருணாநிதி
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம் எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.
7 சிவயோகி சிவக்குமார்
வரைமுறை இல்லாத பட்டுப் போன்ற மகளிரின் மென்தோள் குற்றம் எது? என்று அறியாத புரிதல் அற்றவர்கள் முழ்கும் நரகம்.
8 புலியூர்க் கேசிகன்
உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்.
More Kurals from வரைவின்மகளிர்
அதிகாரம் 92: Kurals 911 - 920