வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று.
Transliteration
vazhanguva thuLveezhndhak kaNNum pazhanguti
paNpil thalaippiridhal indru.
🌐 English Translation
English Couplet
Though stores for charity should fail within, the ancient race
Will never lose its old ancestral grace.
Explanation
Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
2 மணக்குடவர்
வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர். இது பண்புடைமை விடாரென்றது.
3 பரிமேலழகர்
பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப் பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார். (தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்; அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற நற்குடியிற் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும்- தாம் கொடுக்கும் பொருள் சுருங்கிப்போன விடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று - தம் கொடுக்குந் தன்மையினின்று நீங்குதல் இல்லை. கொடைத்தன்மை தலைமுறை தோறும் ஆழவேருன்றுதலால், பழங்குடிக்கு அது நீங்காத பிறவிக் குணமாய்ப் போய்விடுமென்பது கருத்து. உம்மை இறந்தது தழுவிய எச்சம். "தொன்று தொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல், என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பாராட்டத்தக்கது. "ஆற்றுப் பெருக்கற் றடிசுடு மந்நாளும் ஊற்றுப் பெருக்கா லுலகூட்டும் - ஏற்றதொரு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ரானாலும் இல்லை யெனமாட்டா ரிசைந்து." (நல்வழி-6)
5 சாலமன் பாப்பையா
தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.
6 கலைஞர் மு.கருணாநிதி
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
7 சிவயோகி சிவக்குமார்
கொடுத்து உதவுவதில் வறுமையில் வீழ்ந்தாலும் பழைமை வாய்ந்த குடியின் கொடுக்கும் பண்பில் இருந்து பிரிவது இல்லை.
8 புலியூர்க் கேசிகன்
தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கிய போதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள்.
More Kurals from குடிமை
அதிகாரம் 96: Kurals 951 - 960