விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துதொழுகு வார்.
Transliteration
viLindhaarin vaeRallar mandra theLindhaaril
theemai purindhozhuku vaar.
🌐 English Translation
English Couplet
They're numbered with the dead, e'en while they live, -how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.
Explanation
Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
2 மணக்குடவர்
தம்மைத் தெளிந்தா ரில்லின்கண்ணே தீமையைப் பொருந்தி ஒழுகுவார் மெய்யாகச் செத்தாரின் வேறல்லர். இஃது அறம் பொருளின்பம் எய்தாமையின் பிணத்தோடொப்ப ரென்றது.
3 பரிமேலழகர்
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.).
4 ஞா. தேவநேயப் பாவாணர்
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை நல்லவரென்று நம்பித் தாராளமாய்ப் பழகவிட்டவரின் மனைவியின் கண் தீவினை செய்தலை விரும்பியொழுகுவார் ; மன்ற - உறுதியாக ; விளிந்தாரின் வேறு அல்லர் - இறந்தாரின் வேறுபட்டவரல்லர் . உயிர் அடையவேண்டிய அறம்பொருளின்பங்களை அடையாமை பற்றியும் , தீமை செய்யாரென்று நம்பிப் பழகவிட்ட நிலைமையையே தீமை செய்தற்குப் பயன்படுத்தியது பற்றியும் , உயிருடையவரேனும் செத்தவரே என்றார் .'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல்.
5 திருக்குறளார் வீ. முனிசாமி
தம்மைச் சிறிதும் சந்தேகிக்காதவருடைய இல்லாளிடத்திலும் தீமை செய்து நடப்பவர்கள் உயிருடையவர்களானாலும் இறந்தவர்களே ஆவார்கள்.
6 சாலமன் பாப்பையா
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்.
7 கலைஞர் மு.கருணாநிதி
நம்பி பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.
8 சிவயோகி சிவக்குமார்
ஏசப்படவேண்டியவர் வேறு ஒருவர் இல்லை நன்கு அறிந்தவருக்கு தீமை செய்து பழுகுபவரைத் தவிர.
More Kurals from பிறனில் விழையாமை
அதிகாரம் 15: Kurals 141 - 150
Related Topics
Because you're reading about Avoiding Adultery