Kural 584

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

vinaiseyvaar thamsutram vaeNdaadhaar endraangu
anaivaraiyum aaraaivadhu otru.

🌐 English Translation

English Couplet

His officers, his friends, his enemies,
All these who watch are trusty spies.

Explanation

He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

7 scholars' interpretations

1 மு.வரதராசனார்

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

2 மணக்குடவர்

தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன். இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.

3 பரிமேலழகர்

தம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது - தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே; ஒற்று - ஒற்றனாவான். ('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.).

4 ஞா.தேவநேயப் பாவாணர்

வினைசெய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது -அரசியல் வினைஞர், அரசின் உறவின்முறையார் ,பகைவர் என்று சொல்லப்படும் எல்லாரையும் சொற் செயல் பொருட்களால் மறைவாக ஆராய்வானே ; ஒற்று - சரியான ஒற்றனாவான். வினைசெய்வார் முதலிய மூவகுப்பாரும் அரசனுக்குத் தெரியாமலே தன்னாட்டொடும் பகை நாட்டொடும் தொடர்பு கொள்ளக்கூடுமாதலின் ,அவரனைவரையும் மறைவாக ஆராயவேண்டு மென்றார்,'ஆங்கு ' அசைநிலை.

5 சாலமன் பாப்பையா

அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

6 கலைஞர் மு.கருணாநிதி

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.

7 சிவயோகி சிவக்குமார்

செயல்படுபவர், தனக்கு உறவு முறைக் கொண்டவர், வேண்டதகாதவர் என்று பாகுபாடு அற்று அனைவரையும் ஆராய்வதே ஒற்று.

More Kurals from ஒற்றாடல்

அதிகாரம் 59: Kurals 581 - 590

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature