அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு.
Transliteration
anjum aRiyaan amaivilan eekalaan
thanjam eLiyan pakaikku.
🌐 English Translation
English Couplet
A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.
Explanation
In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
2 மணக்குடவர்
அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன். இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.
3 பரிமேலழகர்
அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். ('தஞ்சம'¢, 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அஞ்சும்-போருக்கு அஞ்சுபவனாகவும்; அறியான்-அறியவேண்டியவற்றை அறியாதவனாகவும்; ஈகலான்-ஈகைத் தன்மையில்லாதவனாகவும் இருப்பவன்; பகைக்குத் தஞ்சம் எளியன்-தன்பகைவர்க்கு மிக எளியவனாவான். இந்நான்கு நிலைமைகளுள் ஒன்றிருப்பினும் தோல்விக் கேதுவாயிருக்க, நாலும் ஒன்று சேரின் தோல்வியுறுதல் முழுவுறுதியும் மிக எளிதாய் நேர்வதுமாதலின் 'தஞ்சமெளியன்' என்றார். 'தஞ்சம்' எளிமைப் பொருளிடைச்சொல். "தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே." (தொல்,751) 'தஞ்சமெளியன்' மீமிசைச்சொல். எளியனாதல் எளிதாய் வெல்லப்படுதல்.
5 சாலமன் பாப்பையா
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
6 கலைஞர் மு.கருணாநிதி
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
7 சிவயோகி சிவக்குமார்
அச்சம் என்பதை அறியாமல், அடக்கமுடன் இல்லாமல், கொடுக்கும் பண்பும் அற்று இருப்பவன் பகைக்கு எளிமையாக தஞ்சமடைவான்.
8 புலியூர்க் கேசிகன்
அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்.
More Kurals from பகைமாட்சி
அதிகாரம் 87: Kurals 861 - 870
Related Topics
Because you're reading about Greatness of Enmity