Kural 1173

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

kadhumenath thaanoakkith thaamae kaluzhum
ithunakath thakka thudaiththu.

🌐 English Translation

English Couplet

The eyes that threw such eager glances round erewhile
Are weeping now. Such folly surely claims a smile!.

Explanation

They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

2 மணக்குடவர்

இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.

3 பரிமேலழகர்

(இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து. ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது-இக்கண்கள் அன்று எண்ணிப்பாராது தாமே காதலரைத் திடுமென்று நோக்கிவிட்டு, இன்றும் அவரைக் காணவில்லையென்று தாமே யிருந்தழுகின்ற செய்தி ; நகத்தக்கது உடைத்து-சிரிக்கத் தக்க தன்மையை யுடையது. தாம் ஒன்றை விரும்பிச் செய்துவிட்டுத் தாமே அதன் விளைவு பற்றி யழுவதுபகுத்தறிவாளர் நகையாடத் தக்க செய்தியாதலின், 'நகத்தக்க துடைத்து என்றாள். கண்கள் என்பது அதிகாரத்தால் வந்தது. ஏகாரம் பிரிநிலை.

5 சாலமன் பாப்பையா

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

6 கலைஞர் மு.கருணாநிதி

தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.

7 சிவயோகி சிவக்குமார்

வேண்டும் என்று தானாகவே விரும்பிப் பார்த்து விலகவும் செய்கிறது இது நகைப்புக்கு உரியது.

8 புலியூர்க் கேசிகன்

அன்று, தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், நம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினையே உடையதாகும்.

More Kurals from கண்விதுப்பழிதல்

அதிகாரம் 118: Kurals 1171 - 1180

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature