பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
Transliteration
pakaiennum paNpi ladhanai oruvan
nakaiyaeyum vaendaRpaatru andru.
🌐 English Translation
English Couplet
For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil longing rule your breast.
Explanation
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
2 மணக்குடவர்
பகை யென்று சொல்லப்படுகின்ற குணமில்லாததனை, ஒருவன் விளையாட்டின்கண்ணும் விரும்பற்பாலதன்று. இஃது எவ்விடத்தும் பகைகோடல் தீது என்றது.
3 பரிமேலழகர்
பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன் விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல் இயற்கைத்தன்று. (மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும் தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
பகை என்னும் பண்பு இலதனை-பகையென்று சொல்லப்படும் தீயகுணத்தை; ஒருவன் நகையேயும் வேண்டற் பாற்று அன்று-ஒருவன் விளையாட்டிற்கேனும் விரும்பத்தக்கதாக அரசியல் நூலாற் கொள்ளப்படுவதன்று. இது "இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்" என்று இகலைக் கண்டித்தது போன்று பகையைப் பொதுப்படக் கண்டித்ததாகும். அன்பு என்னும் பண்பாட்டுக் குணத்திற்கு மறுதலையாகலின் ’பண்பிலதனை’ என்றும், விளையாட்டே வினையாகவும் முடியுமாதலின் ’நகையேயும்’ என்றும், வேண்டாமை தொல்லாசிரியர் துணிபென்பார் நூலின்மேல் வைத்தும், கூறினார். ’இலதனை’ என்னும் இரண்டாம் வேற்றுமை அரசியல் நூல் என்னும் பெயரை அவாவி நின்றது. இராமன் பையற் பருவத்தில் விளையாட்டாக மந்தரை கூன்மீது மண்ணுண்டை யடித்தது, பின்பு காளைப் பருவத்தில் நாடுவிட்டுக் காடு செல்லக் கரணிய மாயிற்று என்னுங் கதை, "விளையாட்டா யிருந்தது வினையாய் முடிந்தது" என்னும் பழமொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம். ஏகாரம் பிரிநிலை. உம்மை இழிவு சிறப்பு.
5 சாலமன் பாப்பையா
பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.
6 கலைஞர் மு.கருணாநிதி
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.
7 சிவயோகி சிவக்குமார்
பகை என்ற பண்பில்லாததை ஒருவர் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது.
8 புலியூர்க் கேசிகன்
‘பகை’ என்று கூறப்படும் தீமை தருவதனை, ஒருவன், விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது; இதுவே நீதி நூல்களில் முடிந்த முடிப்பாகும்.
More Kurals from பகைத்திறந்தெரிதல்
அதிகாரம் 88: Kurals 871 - 880
Related Topics
Because you're reading about Knowing the Enemy