Kural 1174

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.

— திருவள்ளுவர் (Thiruvalluvar)
🔤

Transliteration

peyalaatraa neerulandha un-kan uyalaatraa
uyvilnhoi en-kan niruththu.

🌐 English Translation

English Couplet

Those eyes have wept till all the fount of tears is dry,
That brought upon me pain that knows no remedy.

Explanation

These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.

📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)

8 scholars' interpretations

1 மு.வரதராசனார்

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

2 மணக்குடவர்

உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன. கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.

3 பரிமேலழகர்

(இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன. என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. (நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)

4 ஞா.தேவநேயப் பாவாணர்

உண்கண்-என் மையுண்ட கண்கள்; உயல் ஆற்றா உய்வு இல்நோய் என்கண் நிறுத்து-நான் தப்பமுடியாமைக் கேதுவான ஒழியாத காமநோயை என்னிடம் நிறுத்திவிட்டு; பெயல் ஆற்றாநீர் உலந்த-தாமும் தொடாந்து அழமுடியாவண்ணம் நீர் வற்றிவிட்டன. உய்வில் நோய் நிறுத்தலாவது, பிரிதலும் பின் விரைந்து கூடாமையு முடையாரைக் காட்டி, அதனானுண்டாகும் ஆற்றாமை நோயை நீடுநிற்கச்செய்தல். என்னை நெடிது வருந்தச்செய்த தீவினையால் தாமும் வற்றி வறண்டுபோயின என்பதாம்.

5 சாலமன் பாப்பையா

மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

6 கலைஞர் மு.கருணாநிதி

தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன.

7 சிவயோகி சிவக்குமார்

சொல்லமுடியா நீர் வற்றிய கண் விடைபெறமுடியா பிறவி நோயை என்கண் நிலை நிறுத்திக் கொண்டது.

8 புலியூர்க் கேசிகன்

அன்று, யான் உய்யாத அளவு தீராத காமநோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர்வற்றி வறண்டு விட்டனவே!

More Kurals from கண்விதுப்பழிதல்

அதிகாரம் 118: Kurals 1171 - 1180

Explore More Thirukkural

திருத்தமிழ்

திருக்குறள் - 1330 குறள்கள், 133 அதிகாரங்கள், 3 பால்கள். உலகப்பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியம்.

© 2025 ThiruTamil.com

Follow Us

Download App

ThiruTamil Calendar App

Made with ❤️ for Tamil Literature