செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின்.
Transliteration
seRuvaarkkuch chaeNikavaa inpam aRivilaa
anjum pakaivarp peRin.
🌐 English Translation
English Couplet
The joy of victory is never far removed from those
Who've luck to meet with ignorant and timid foes.
Explanation
There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
2 மணக்குடவர்
அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின் அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும். அறிவு- காரியவறிவு.
3 பரிமேலழகர்
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இனபங்கள் நீங்கா. (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - அரசியல் அறிவில்லாத அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்கு இன்பம் சேண் இகவா - அவரை வெறுத்துப் பொருவார்க்கு வெற்றியின்பங்கள் தொலைவில் நீங்கி நில்லா. ஆம்புடை யறிதலும் அறிந்தாற் செய்து முடிக்கும் மனத்திண்மையுங் ஒருங்கேயில்லாத பகைவரைப் பெறுதல் அரிதாதலின் ’பெறின்’ என்றும், அவரைச் செறுவார்க்கு வெற்றி நெருங்கி நிற்றலின் ’சேணிகவா’ என்றும் கூறினார். பரிமேலழகர் சேணின்பம் எனக்கூட்டி ’உயர்ந்த இன்பங்கள்’ எனப் பொருளுரைப்பர். அதுவும் பொருந்துவதே. ஆயின், ஆசிரியர் கருத்ததுவாயின் ’செறுவார்க்குச் சேணின்பம் நீங்கா என்று யாத்திருக்கலாம். ’அறிவிலா அஞ்சும்’ பெயரெச்ச வடுக்கு. ’இன்பம்’ பால்பகா வஃறினைப் பெயர். வெற்றி, பொருட்பேறு, வலிமிகை, பாடாண் புகழ் முதலியன பல்வேறு இன்பங்களாம்.
5 சாலமன் பாப்பையா
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.
6 கலைஞர் மு.கருணாநிதி
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.
7 சிவயோகி சிவக்குமார்
பகையுணர்வு உள்ளவருக்கு பிரிக்கமுடியாத இன்பம் அறிவில்லாத அஞ்சும் பகைவர் பெற்றுவிட்டால்.
8 புலியூர்க் கேசிகன்
நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு, உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும்.
More Kurals from பகைமாட்சி
அதிகாரம் 87: Kurals 861 - 870
Related Topics
Because you're reading about Greatness of Enmity