தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
Transliteration
than-thuNai indraal pakaiyiraNdaal thaanoruvan
in-thuNaiyaak koLkavatrin ondru.
🌐 English Translation
English Couplet
Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.
Explanation
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
2 மணக்குடவர்
பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.
3 பரிமேலழகர்
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
தன் துணை இன்று- தனக்குதவுந் துணையொன்று மில்லாமலும் பகை இரண்டு- தன்னைக் கெடுக்கக் கூடிய பகை இரண்டுடையனவாகவும் தான் ஒருவன் -தான் தனியனாகவும் இருப்பவன் ; அவற்றின் ஒன்று இன் துணையாகக்கொள்க- அப்பகை யிரண்டனுள் தனக்கிசைந்த தொன்றை அப்பொழுதைக்கேனும் நிலையாக வேனும் நல்ல துணையாக அமைத்துக்கொள்க. தனக்கிசைந்து தன்னொடு சேரக்கூடியதும் இன்னொரு பகையை வெல்லுதற் கேற்றதுமாகும்.உண்மையான துணையாகச் செய்து கொள்ள வென்பார் இன்றுணையா என்றார். ஆல் இரண்டும் அசைநிலை. ஆக என்னும் வினையெச்ச வீறு ஆ எனக் கடைக்குறைந்து நின்றது. கொள்கவற்றின் என்பதில் அகரந்தொக்கது. இவ்விரு குறளாலும் நட்பாக்கக் கூடியபகை கூறப்பட்டது.
5 சாலமன் பாப்பையா
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
6 கலைஞர் மு.கருணாநிதி
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
7 சிவயோகி சிவக்குமார்
தனக்கு துணை இல்லாமல் பகை கொண்டவர்கள் இரண்டாக இருந்தால் அதில் ஒன்றை இனிய துணையாக ஏற்கவேண்டும்.
8 புலியூர்க் கேசிகன்
‘தனக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு’ என்னும் போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்து கொள்ளல் வேண்டும்.
More Kurals from பகைத்திறந்தெரிதல்
அதிகாரம் 88: Kurals 871 - 880
Related Topics
Because you're reading about Knowing the Enemy