வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது.
Transliteration
vazhinhoakkaan vaaippana seyyaan pazhinhoakkaan
paNpilan patraarkku inidhu.
🌐 English Translation
English Couplet
No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight.
Explanation
(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.
📚 தமிழ் விளக்கம் (Tamil Explanations)
8 scholars' interpretations
1 மு.வரதராசனார்
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
2 மணக்குடவர்
ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது. இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.
3 பரிமேலழகர்
வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.).
4 ஞா.தேவநேயப் பாவாணர்
வழிநோக்கான்-வினைகளைச் செய்யும் வழிகளை ஆய்ந்தறியாதவனாகவும்; வாய்ப்பன செய்யான்- தப்பாது வாய்க்கும் வினைகளை மேற்கொள்ளாதவனாகவும்; பழிநோக்கான்-தீயன செய்யின் தனக்கு வரும் பழியைக் கருதாதவனாகவும்; பண்பு இலன்-பிறரியல்பையறிந்து அதற்கேற்ப நடக்கும் நற்குணமில்லாதவனாகவும் இருப்பவனது பகை; பற்றார்க்கு இனிது-அவன் பகைவர்க்கு இனிதாகும். "பண்பெனப் படுவது பாடறிந்த தொழுகல்." (கலித்.133), வெல்வது எளிதாகவும் வெற்றியால் வரும் பொருள் பெரிதாகவும் இருத்தலால் ’பற்றார்க்கினிது’ என்றார்.
5 சாலமன் பாப்பையா
நீதி நூல்கள் சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.
6 கலைஞர் மு.கருணாநிதி
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
7 சிவயோகி சிவக்குமார்
தனக்கான பாதை அறியாமல், தனக்கு உண்டாகும் வாய்ப்பை பயன்படுத்தாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பில்லாமல் இருப்பவனை தனக்கே எல்லாம் என்றிருப்பவன் வெற்றிகொள்வது எளிது.
8 புலியூர்க் கேசிகன்
நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன், ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும்.
More Kurals from பகைமாட்சி
அதிகாரம் 87: Kurals 861 - 870
Related Topics
Because you're reading about Greatness of Enmity